செந்தூல், ஜூன்.04-
கோலாலம்பூர், செந்தூல் பண்டார் பாருவில் வீற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் புதிய கட்டடத் திருப்பணிக்கு நிதி திரட்டும் நோக்கில், அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்புத் தங்கக் காசு மற்றும் தங்க அம்மன் சிலை விற்பனை நிகழ்வை ஆலய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஆலயத் தலைவர் சுரேன் தலைமையில், பிரமுகர் சி.ஆர். கார்த்திக்கினால் சிறப்புத் தங்கக் காசு விற்பனைத் திட்டம் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆடி மாதத்திற்கு மிகவும் பிரசித்திப் பெற்ற தேவிஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் திருப்பணிக்கு நிதி திரட்டும் வகையில் 0.2 கிராம் அம்மன் தங்க காசு தலா 501 ரிங்கிட்டிற்கும், 70 கிராம் சுத்த தங்க அம்மன் சிலை 60 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. அம்மன் தங்கக் காசும், தங்க அம்மன் சிலையும் 9 நாட்கள் சிறப்புப் பூஜையில் வைக்கப்பட்டு, முன்உறுதி செய்த பக்தர்களுக்காக வழங்கப்படும் என்று சி. ஆர். கார்த்திக் விளக்கினார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையவுள்ள இப்புனிதத் திருப்பணியில் பக்தர்கள் தங்களின் பேராதரவை வழங்குமாறு ஆலய நிர்வாகம் சார்பில் சி.ஆர். கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.








