கோலாலம்பூர், பிப்ரவரி.01-
பத்துமலை திருத்தலம் தற்போது பக்தர்களுக்கு மட்டுமின்றி, உலகெங்கிலும் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட முன்னணி ஆன்மீக மற்றும் சுற்றுலா மையமாகத் திகழ்கிறது என்று ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தேவஸ்தான கட்டடத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் டான் ஶ்ரீ நடராஜா உரையாற்றினார். டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றிய டான் ஶ்ரீ நடராஜா, ஒரு காலத்தில் அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதிகள் கூட இன்றி இருந்த பத்துமலை, இன்று பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் பல்வேறு கட்ட அபிவிருத்திப் பணிகளால், அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட ஒரு திருத்தலமாக இது உருவெடுத்துள்ளது.

இன்றைய தைப்பூச விழாவில் மலேசிய அமைச்சருடன் இணைந்து பல்வேறு நாடுகளின் தூதர்களும் கலந்து சிறப்பித்துள்ளது பத்துமலைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாகும். இது இந்த திருத்தலத்தின் உலகளாவிய புகழையும் நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டையும் உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தைப் போற்றும் இடமாக பத்துமலை தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்பதையும் டான் ஶ்ரீ நடராஜா தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னதாக, நிகழ்விற்கு வருகை தந்தை அனைத்து பிரமுகர்களுக்கும் டான் ஶ்ரீ நடராஜா, டத்தோ என். சிவகுமார் மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.
இந்தியப் தூதர் BN ரெட்டி, நார்வே தூதர் Marianne Fosland, சுவீடன் தூதர் Robert Lemon, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், டான் ஶ்ரீ நடராஜாவின் துணைவியார் புவான் ஶ்ரீ மல்லிகா உட்பட அதிகமான பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.








