அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் மலேசியா சார்பில், கோலாலம்பூர் ஸ்ரீ ஜகந்நாத மந்திர் ஆலயத்தில் வரும் ஏப்ரல் 18 முதல் 20-ஆம் தேதி வரை ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
மங்களகரமான அக்ஷய திருதியை நாளையொட்டி இந்த விழா அமையவிருக்கும் இந்த மூன்று நாள் நிகழ்வு குறித்து ஆலயத்தின் இணைத் தலைவர் ஸ்ரீமன் கிருபா சிந்து கிருஷ்ண தாஸ் கூறுகையில், "இந்த விக்ரஹ பிரதிஷ்டை வெறும் விழா மட்டுமல்ல; இது வரும் தலைமுறையினருக்கு அமைதி, தியானம் மற்றும் ஆன்மீகத் தொடர்பை வழங்கும் ஒரு புனித ஸ்தலத்தை உருவாக்கும் முக்கிய மைல்கல்லாகும்" என்றார். அதேவேளையில் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் நிகழ்வு குறித்தும் அவர் விவரித்தார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநர் ஸ்ரீமதி டாக்டர் சாந்தி ரூபா தேவி தாசி பேசுகையில், "மத, இன, பின்னணி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றுகூடி அமைதியான சூழலை அனுபவிக்கவும், ஆன்மீக கலாச்சார நெறிகளுடன் இணையவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இளைஞர்கள் வலுவான பண்புகளுடனும் சரியான வழிகாட்டுதலுடனும் வளர்வதற்கு இது போன்ற ஒரு நல்ல சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம்," என்று குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் ஸ்ரீ ஜகந்நாத மந்திர், 1985-ஆம் ஆண்டு முதல் உணவு விநியோகம், கலாச்சாரப் பரப்புரை மற்றும் கல்விச் செயல்பாடுகள் மூலம் சமூகத்திற்குத் தொண்டாற்றி வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பாரம்பரிய வேத சடங்குகள், பக்தி இசை மற்றும் பிரசாத விநியோகம் ஆகியவை இடம்பெறவுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் இந்த அர்த்தமுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு இறையருள் பெற அழைக்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு www.iskconkl.com.my என்ற இணையதளத்தையோ அல்லது சமூக ஊடகப் பக்கங்களையோ நாடலாம்.









