ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.01-
பினாங்கு தைப்பூச கொண்டாட்டத்தையொட்டி KUSKOP எனப்படும் தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம், 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த பினாங்கு, தண்ணீர்மலை ஸ்ரீ பால தெண்டாயுதபாணி ஆலயத்திற்கு ஒன்றரை லட்சம் ரிங்கிட் மானியத்தையும், அந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட் மானியத்தையும் இன்று அறிவித்தார்.
பினாங்கு தண்ணீர் மலை ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலயம், மற்றும் பினாங்கு நகரத்தார் ஆலயம் ஆகியவற்றில் இன்று தைப்பூச கொண்டாட்டத்தையொட்டி, அவ்வாலயங்களுக்கு அருகில் உள்ள ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய வளாகத்தில் KUSKOP அமைச்சின் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு இளைப்பாறும் கூடாரங்கள் அமைக்கப்பட்டது.
KUSKOP அமைச்சின் கீழ் இயங்கும் பல்வேறு ஏஜென்சிகள் ஒன்றிணைந்து அமைத்த இந்தத் தளத்தில் அந்த ஏஜென்சிகள் வழங்கக்கூடிய, சிறு வணிக வாய்ப்புகள், மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்த இளையோர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் விளக்க மளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
KUSKOP அமைச்சின் வாய்ப்புகளை இந்திய சமூகம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஸ்டீவன் சிம் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்நிகழ்வை அமைச்சர், இன்று பிற்பகலில் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது இரு ஆலயங்களுக்கும் முறையே ஒரு லட்சம் ரிங்கிட்டும். 50 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுவதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்தார்.
இந்த நிதி உதவியானது, ஆலயத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாடு, இனம் மற்றும் பினாங்கு மாநிலம் ஆகியவற்றுக்கு இந்திய சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்தில் கொண்டு இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
முன்னதாக, KUSKOP ஏஜென்சிகளின் கூடாரங்களைப் பார்வையிடுவதற்கு வருகை புரிந்த அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் புக்கிட் குளுகோர் எம்.பி.ராம் கர்ப்பால், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு, ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத் தலைவர் குமரத்திரவியம் மற்றும் இதர பிரமுகர்களுக்கு ஆலய நிர்வாகம் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தது.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் பணியாளர்களும் தன்னார்வலர்களும் பெருந்திரளாக பங்கேற்று, தைப்பூச விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உரிய வழிகாட்டலுடன் இக்கண்காட்சி சிறக்க செய்தனர்.








