ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.01-
உலக அளவில் புகழ்பெற்ற பினாங்கு தைப்பூச விழாவைப் பாதுகாத்து மேம்படுத்துவது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு மட்டும் பொறுப்பு அல்ல. அது, பொதுமக்களாகிய நம் அனைவருக்கும் உள்ள கூட்டுப் பொறுப்பாகும் என்று அந்த வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார்.
இன்று பினாங்கு, தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தின் 240-ஆம் ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, அங்கு வருகை புரிந்த மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவை வரவேற்றுப் பேசிய போது ராயர் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் தைப்பூச விழாவினை எவ்விதப் பிரச்சினையுமின்றி அமைதியான முறையில் மேன்மேலும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதே வாரியத்தின் முக்கிய நோக்கமாகும் ராயர் தமது உரையில் குறிப்பிட்டார்.
'யாமிருக்க பயமேன்' என்ற சொல்லுக்கேற்ப, தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் மிகுந்த சக்தி வாய்ந்தவர்.
இந்தத் தைப்பூச விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெறுவதற்குப் பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர். அவர்களுக்குத் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராயர் கூறினார்.








