ஷா ஆலாம், பிப்ரவரி.07-
காஜாங், தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பாதை பிரச்சினைக்கு 3.3 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய சாலை அமைப்பதன் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்வை சிலாங்கூர் அரசு எட்டியுள்ளது. சுங்கை லோங் சாலையிலிருந்து 383 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் இப்பாதை, அப்பகுதியின் வருங்கால மேம்பாட்டிற்கும் சட்ட விதிகளுக்கும் உட்பட்ட நிரந்தரத் தீர்வாக அமையும் என பாப்பாராய்டு தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில், இந்தப் புதிய சாலை கட்டுமானத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதனை விரைவாகச் செயல்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன், சாலை இருப்பு நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கவும், வருங்காலத்தில் இச்சாலையைப் பயன்படுத்தும் நில உரிமையாளர்கள் கட்டுமானச் செலவில் பங்களிப்பதற்கான முறையான வழிமுறைகளை வகுக்கவும் தீர்மானிக்கப்பட்டது என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

இதே போல், PJS 4 பகுதியில் இஸ்லாமிய மயான நிலத்தில் அமைந்திருந்த மூன்று வழிபாட்டுத் தலங்களான ஸ்ரீ மகா மாரியம்மன் டேசா பெராங்சாங், ஸ்ரீ கோட்டை மதுரை வீரன் மற்றும் சீக்கியர் சங்கம் ஆகியவற்றுக்கு மாற்று நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் இன நல்லிணக்கத்தைப் பேணும் நோக்கில், அந்தந்த ஆலய நிர்வாகத்தினர் சுயமாக முன்வந்து இடமாற்றத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதை அவர் பாராட்டியுள்ளார்.

இந்த விவகாரங்களுக்கு அரசு முறையான மற்றும் சமநிலையான தீர்வை எட்டியுள்ளதால், அனைத்துத் தரப்பினரும் இதனை மீண்டும் சர்ச்சையாக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், சம்பந்தப்பட்ட நிலங்களில் இனி கட்டுமானப் பணிகள் தடையின்றித் தொடரும் என்றும், இது மாநில அரசின் நிர்வாகத் திறமைக்கும் சமூக ஒற்றுமைக்கும் சான்றாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.








