பந்திங், பிப்ரவரி.02-
சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினரும், பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ. பாப்பாராய்டு, நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தனது தொகுதியில் உள்ள தெலுக் டத்தோ அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வருகை தந்து சிறப்பித்தார்.

ஆலயத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து தைப்பூசக் கொண்டாட்டங்களைப் பார்வையிட்ட அவர், பக்தி உணர்வுடனும், ஒழுக்கத்துடனும், ஒற்றுமையுடனும் விழாவைக் கொண்டாடிய பொதுமக்களைப் பாராட்டினார்.

இந்த விழாவின் ஒரு முக்கிய அங்கமாக, சிலாங்கூர் மாநில அரசின் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான குழுவான LIMAS- ஸின் சார்பில், கோலா லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆலயங்களுக்கு மாநில அரசின் நிதியுதவி காசோலைகளை அவர் வழங்கினார். இந்த நிதியுதவி, ஆலயங்களின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், உள்ளூர் சமூக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கவும் பெரிதும் துணையாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பாப்பாராய்டு, "இங்கு நிலவும் சூழல் நமது மாநிலத்தின் பலமான பல்லின மக்களின் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது" என்று குறிப்பிட்டார். உள்ளூர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, பந்திங் பகுதியில் மிகுந்த எழுச்சியுடன் அமைந்தது.








