சுங்கை பட்டாணி, பிப்ரவரி.02-
சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 108-ஆவது தைப்பூசத் திருவிழாவையொட்டி இன்று திங்கட்கிழமை மாலை வெள்ளி ரத ஊர்வலத்துடன் பக்திப் பரவசமாகத் தொடங்கியது.
வண்ண மலர்களாலும், மின்னொளி அலங்காரங்களாலும் நளினமாக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில், முருகப் பெருமானின் மேளதாளங்கள் மற்றும் நாதஸ்வர இசை முழங்க, சரியாக மாலை 7:20 மணியளவில் வீதி உலா புறப்பட்டார்.

வெள்ளி ரதப் புறப்பாட்டிற்கு முன்னதாக, மங்கல இசை முழங்க ஆலயத்தில் எம்பெருமானுக்கு நறுமணப் திரவியங்களால் விசேஷ அபிஷேகங்கள் சீரும் சிறப்புமாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் ஒலிக்கச் செய்யப்பட்ட மகா தீபாராதனையின் போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரங்களைக் கூப்பி, 'அரோகரா' முழக்கத்துடன் மனமுருகி வழிபட்டனர்.
வெள்ளி ரதத்தின் பின்னால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' கோஷமிட்டும், பக்திப் பாடல்களைப் பாடியும் பின்தொடர்ந்தனர். சுங்கை பட்டாணியின் 10 முக்கிய இடங்களில் ரதம் நிறுத்தப்பட்டு, பக்தர்களின் அர்ச்சனைகளை ஏற்றுக் கொண்டு எம்பெருமான் அருள்பாலிக்கிறார்.

முருகப் பெருமானின் திருவடிகளில் சமர்ப்பிக்க, பக்தர்கள் பெரும் பக்தியுடன் ஏந்தி வந்த அர்ச்சனைத் தட்டுகளை அர்ச்சகர்கள் இன்முகத்தோடு பெற்றுக் கொண்டனர். எம்பெருமானின் திருவருள் ஒவ்வொரு பக்தருக்கும் சென்றடையும் வகையில், ஆகம முறைப்படி மந்திரங்கள் முழங்க அவர்கள் அர்ச்சனைகளைச் செய்து, பிரசாதங்களை வழங்கி வருகின்றனர்.
முன்னதாக, வெள்ளி இரத ஊர்வல புறப்பாட்டிற்கு சிறப்பு பிரமுகராக அழைக்கப்பட்ட ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், கெடா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ ஆனந்தன் மற்றும் நன்கொடையாளர்கள், ஆலயத் தலைவர் இராஜேந்திரன் பெரியசாமி மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் சிறப்பு வருகை புரிந்த துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், பக்திப் பெருக்கோடு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு நெகிழ்ந்தார். 'முருகப் பெருமானின் இந்த மகத்தான ரத ஊர்வலத்தில், இத்தனை பெரிய அளவில் பக்தர்கள் ஒன்றுகூடி பக்திப் பரவசத்துடன் பங்கேற்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது' என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த பிரமாண்டமான வெள்ளி ரத ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி சீராக நடைபெறுவதை உறுதிச் செய்ய, கோல மூடா மாவட்ட போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 450 போலீசார் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளி ரதம் நாளை காலை 8 மணியளவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








