கோலாலம்பூர், பிப்ரவரி.04-
இந்த ஆண்டு பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மலேசியாவின் கலாசார பாரம்பரியத்தின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியது. இந்து பக்தர்களுடன் இணைந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதில் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இது குறித்து அமெரிக்கத் தூதரகம் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் Edgard D. Kagan, ஒரு கலாசார பரிமாற்றத்தின் அங்கமாக பத்துமலையின் 272 படிக்கட்டுகளில் ஏறி இந்து பக்தர்களுடன் இணைந்ததாகத் தெரிவித்துள்ளது.
அந்தப் பதிவில், தூதர் Edgard D. Kagan பால் குடம் ஏந்தி படிக்கட்டுகளில் ஏறுவது மற்றும் பக்தர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகளைத் தூதரகம் பகிர்ந்துள்ளது.
"272 படிக்கட்டுகள் மரியாதையுடன் கூடிய இதயம். பத்துமலையில் மறக்க முடியாத வெள்ளிக்கிழமையாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இரவு அமைந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தைப்பூசத்தையொட்டி பக்தர்களுடன் சேர்ந்து பால் குடம் ஏந்திச் சென்றதையும் தூதர் Kagan பெருமையாகக் கருதுகிறார். இந்த துடிப்பான, ஆன்மீக மற்றும் வண்ணமயமான கொண்டாட்டத்திற்கு எங்களை வரவேற்ற மலேசிய மக்களுக்கு நன்றி. இது மலேசியாவின் பக்தி மற்றும் பாரம்பரியத்தின் செழுமையான வரலாற்றுக்கு ஒரு சான்றாகும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளப் பயனர்கள் இந்தப் பதிவிற்கு மிகுந்த நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பதிவு வெளியான குறுகிய காலத்திலேயே 950-க்கும் மேற்பட்ட Likes பெற்றுள்ளது. பலரும் பத்துமலையில் தூதர் Kagan வருகையைப் பாராட்டியதோடு அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.








