கோலாலம்பூர், பிப்ரவரி.01-
பத்துமலை திருத்தலத்திற்கு வருகை தரும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அங்கு நகரும் மின் படிக்கட்டான Escalator அமைக்கும் திட்டம் மற்றும் பல்லடுக்கு மண்டபப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு நனவாக்கப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இன்று பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டே உரையாற்றும் போதே அவர் இதனை உறுதிப்படக் கூறினார்.
பத்துமலை திருத்தலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது காலத்தின் அவசியம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், "பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இந்த மின் படிக்கட்டுத் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இது இங்கு வரும் பல்லாயிரக்கணக்கானோருக்குப் பெரும் பயனளிக்கும்," என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.
மலேசியாவின் தனித்துவமான கலாச்சார அடையாளமாக விளங்கும் பத்துமலையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மலேசியாவின் பன்முகத்தன்மையைப் போற்றும் வகையில் டிஜிட்டல் தளங்களை நல்லிணக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 'விசிட் மலேசியா 2026' (Visit Malaysia 2026) பயணத் திட்டத்தின் கீழ் வரும் சுற்றுலாப் பயணிகள் இத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களால் கவரப்படுவார்கள் என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மலேசியாவின் பலம் என்றும் கூறி, "வெற்றிவேல், வீரவேல்!" என்ற முழக்கத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா, அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிற்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.
அதே போன்று அமைச்சர் கோபிந்த் சிங்கும், தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜாவின் சமயப் பணியை பாராட்டும் விதமாக அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.
பின்னர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் மற்றும் இதர பிரமுகர்களுடன் இணைந்து பத்துமலை கடைகளை பார்வையிட்டதுடன் பக்தர்களையும் கோபிந்த் சிங் சந்தித்தார்.
தமது இலக்கவில் அமைச்சு சார்பாக பத்துமலைத் திருத்தலத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் உணவு மற்றும் பானங்களை அமைச்சத்ர கோபிந்த் சிங் தனது கைப்பட வழங்கினார்.
அதிகமான பக்தர்கள் அமைச்சர் கோபிந்த் சிங்கிடமிருந்து உணவைப் பெற்றுக் கொண்டனர்.








