கோலாலம்பூர், பிப்ரவரி.01-
பத்துமலை தைப்பூசத் திருவிழா என்பது வெறும் வழிபாட்டுத் தலம் சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல; அது ஒற்றுமை, சேவை மற்றும் தர்மத்தின் சங்கமம். பக்திப் பெருக்கோடு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவளிப்பது என்பது இறைவனுக்குச் செய்யும் சேவையாகும். அத்தகைய உன்னதமான ஒரு பணியை ஜசெக இளைஞர் மற்றும் மகளிர் பிரிவினர் ஒன்றிணைந்து இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தி மற்றும் தர்மத்தின் அடையாளமாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு, கோபிந்த் சிங் டியோ தலைமையில் இன்று பத்துமலையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

பிற்பகலில் நடைபெற்ற இந்த உணவளிப்பு நிகழ்வில் சுமார் 4 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த அன்னதான நிகழ்ச்சியை ஜசெக இளைஞர் பிரிவான DAPSY- யின் சிலாங்கூர் மாநிலம் , DAPSY நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் ஜசெக சிலாங்கூர் மாநில மகளிர் பிரிவு இணைந்து அருள் குமார் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜசெக தலைவர் கோபிந்த் சிங்குடன் சட்டமன்ற உறுப்பினர்களான ஜே. அருள் குமார், பிரகாஷ் சம்புநாதன், ஓங் சூ வேய், DAPSY சிலாங்கூர் தலைவர் லீ வீ பின், DAPSY நெகிரி செம்பிலான் தலைவர் லிம் சுங் வெங், DAP மகளிர் சிலாங்கூர் பிரதிநிதி மற்றும் பிற கவுன்சிலர்கள் ஆகியோரும் பத்துமலை தைப்பூச அன்னதான ஏற்பாட்டில் நேரில் கலந்து கொண்டனர்.

இந்த அன்னதானம் வெற்றிகரமாக நடைபெற காரணமான ஆதரவாளர்கள், உதவியாளர்கள் மற்றும் உணவளிப்பு குழுவினருக்கு கோபிந்த் சிங், தனது மனமார்தந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.








