சுங்கை பட்டாணி, பிப்ரவரி.03-
ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் திருவிழாவின் போது முருகன் ஆலயங்களில் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமின்றி, போலீஸ் துறையில் பணியாற்றும் இந்திய அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் ஒன்றிணைந்து தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகத்தைத் தணிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

அந்த வகையில், சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 108-ஆவது தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கோலமூடா மாவட்ட போலீஸ் துறையைச் சேர்ந்த இந்தியக் காவலர்களும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளும் ஒன்றிணைந்து 36-ஆவது ஆண்டாகத் தண்ணீர் பந்தல் அமைத்துச் சேவை புரிந்தனர்.
இச்சேவை குறித்துக் கருத்துரைத்த கோலமூடா மாவட்ட போலீஸ் துறையின் துணைத் தலைவர் Supt. சரவணன் சண்முகம், இந்தாண்டு தைப்பூசத் திருவிழா எந்தவோர் அசம்பாவிதங்களுமின்றி மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது குறித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இப்பணி வெறும் தாகம் தீர்ப்பது மட்டுமல்லாமல், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது என சரவணன் சண்முகம் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.








