பெந்தோங், பிப்ரவரி.09-
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் மீள் எழுச்சிப் பெற்று இருப்பது குறித்து பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமிதம் யங் செபுரா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திற்கு சிறப்புப் பிரமுகராக கலந்து கொண்ட யங் செபுரா திசைகளுக்கு அளித்த பேட்டியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆலயம் புதுப்பொலிவுடன் காணப்படுவதும், கண்கவர் அலங்காரங்களுடன் கும்பாபிஷேக விழாவைச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதற்கும் ஆலயத்தின் புதிய நிர்வாகத்திற்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாலயப் புனரமைப்புப் பணிகளுக்காக கடந்த ஆண்டு பெந்தோங் நாடாளுமன்ற அலுவலகம் சார்பில் 30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழாவிற்காகக் கூடுதல் நிதியாக 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பெந்தோங் மக்களின் வரலாற்று அடையாளமாகத் திகழும் இவ்வாலயம், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் உன்னத இடமாகத் திகழ வேண்டும் என்றும், புதிய நிர்வாகம் இந்திய சமூகத்தின் நலனுக்காகத் தொடர்ந்து நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் யங் செபுரா கேட்டுக் கொண்டார்.
ஆலயத் தலைவர் சண்முகம் பெரியசாமி கூறுகையில் ஸ்தபதி ரவி கண்ணா உட்பட ஆலயம் மீண்டும் புதுபொலிவுடன் திகழ்வதற்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பெந்தோங் நகரில் சீனர்கள் வசிக்கின்ற ஒரு பகுதியில் ஒரு முருகன் ஆலயம் வீற்றிருப்பது தனித்துவமான சிறப்பாகும் என்று கும்பாபிஷேகத்தை சிறப்பாக வழிநடத்திய சிவஸ்ரீ அ.ப. முத்துக்குமாரசிவச்சாரியார் குறிப்பிட்டார்.
முருகனின் அருளில் இவ்வாலய திருப்பணிக்கு உதவியது குறித்து பூச்சோங்கைச் சேர்ந்த கனகரத்னம் சண்முகம் பெருமிதம் தெரிவித்தார்.
ஒன்பது அடி உயரத்தில் ராஜ அலங்காரத்துடன் இவ்வாலயத்தை நிர்மாணிப்பதற்கு உதவிய பூச்சோங்கைச் சேர்ந்த கனகரத்னத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் ஆலய தர்மகர்த்தா மோர்கன் முனிசாமி.
இவ்வாலய மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, அடுத்த 48 நாட்களுக்குச் சிறப்பு மண்டலாபிஷேகத் திருவிழா நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.








