பஹாமஸ் தீவிலிருந்து புறப்பட்ட இந்த விமானம், ஃபுளோரிடா கடற்கரையிலிருந்து சுமார் 128 கிலோமீட்டர் தொலைவில் அட்லான்டிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. விபத்தின்போது விமானத்திலிருந்த அவசரச் சமிக்ஞை செயல்பட்டதால், அமெரிக்கக் கடற்காவல் படைக்குத் தகவல் கிடைத்தது.
விமானம் கடலில் விழுந்தவுடன், விமானி உட்பட 11 பயணிகளும் சிறிய அவசரக் கால மிதவைகளில் ஏறி சுமார் ஐந்து மணி நேரம் கடலில் தத்தளித்தனர். அந்தச் சமயத்தில் அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஆகாயப்படையின் மேஜர் எலிசபத் பையோவடி தலைமையிலான விமானம், உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பயணிகளுக்குத் தேவையான உணவு மற்றும் கூடுதல் மிதவைகளை வழங்கினர். பின்னர், ஹெலிகாப்டர்கள் மூலம் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் உயிர் தப்பியதை "அதிசயம்" என மீட்புக் குழுவினர் வர்ணித்துள்ளனர்.








