காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிச் செல்லும் ஆயுதமேந்திய குழுக்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் விமானங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் முக்கிய நிலைகள் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் காரணமாக காபூல் மற்றும் எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தங்களின் இறையாண்மையை மீறி பாகிஸ்தான் நடத்தியுள்ள இந்த வான்வழித் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் உச்சக்கட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.








