சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நீதிமன்றத்தின் பெயரால் போலி ஆவணங்களை அனுப்பி பணப்பறிப்பில் ஈடுபடும் மோசடி கும்பல்கள் குறித்து சிங்கப்பூர் நீதிமன்றங்கள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் போன்ற செயலிகள் வாயிலாகப் போலியான நீதிமன்ற உத்தரவுகளை அனுப்பி, சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க வங்கி கணக்கிற்குப் பணத்தை மாற்றுமாறு பொதுமக்களை இந்த மோசடி கும்பல்கள் மிரட்டி வருகின்றன.
இது தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சிங்கப்பூர் நீதிமன்றங்கள் ஒருபோதும் குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் அல்லது மின்னஞ்சல் வழியாகப் பணப்பரிமாற்றம் செய்யக் கோருவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், வங்கி கணக்கு விவரங்களையோ அல்லது ரகசிய குறியீடுகளையோ நீதிமன்ற அதிகாரிகள் ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளைப் போல நடித்து ஏமாற்றும் மோசடிகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய போலி ஆவணங்களைப் பெறுபவர்கள், அவற்றை உறுதிப்படுத்த www.courtorders.gov.sg என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறும், சந்தேகம் இருந்தால் 1799 என்ற 'ஸ்கேம்ஷீல்ட்' உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








