இன்று செவ்வாய்க்கிழமை இரவு, முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இது "செந்நிறச் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. ரமலான் மாதத்தின் 14-ஆவது இரவு மற்றும் சப் கோ மே கொண்டாட்டத்துடன் இணைந்து வரும் இந்த சந்திர கிரகணம், கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தென்படும் என்று மலேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த கிரகணத்தின் பகுதிநேர கிரகண நிலை, மாலை 5.50 மணிக்குத் தொடங்கும். முழு கிரகண நிலை இரவு 7.04 மணிக்கும், அதன் உச்சகட்டம் இரவு 7.33 மணிக்கும் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முழு கிரகண நிலை இரவு 8.02 மணிக்கு முடிவடைந்து, பின்னர் மீண்டும் பகுதி நேர கிரகண நிலைக்குத் திரும்பி இரவு 9.17 மணிக்கு முழுமையாக நிறைவடையும்.
தீபகற்ப மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்களில், சந்திரன் உதயமாவதே முழு கிரகண நிலையின்போதுதான் என்பதால், மாலை நேர வெளிச்சத்தின் காரணமாக இதைக் காண்பது சற்று கடினமாக இருக்கலாம். இருப்பினும், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் சந்திரன் சீக்கிரமாகவே தோன்றுவதாலும், வானத்தில் அது சற்று உயரத்தில் அமைந்திருப்பதாலும், அங்குள்ள மக்கள் கிரகணத்தைத் தெளிவாகக் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மலேசிய விண்வெளி ஆய்வு மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வானிலை சாதகமாக இருந்தால் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம். இருப்பினும், தொலைநோக்கி மூலம் இதைக் காணும்போது இன்னும் தெளிவாகத் தெரியும் என்று அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.








