ஹனோய், ஜூலை.11-
தெற்கு வியட்நாமில் உள்ள சுற்றுலாத் தீவு ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த அதிவேகப் படகு இன்று சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இந்தியச் சுற்றுலாப் பயணிகள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வியட்நாமின் மிகப் பெரிய தீவான Phu Quoc அருகே உள்ள Hon May Rut Ngoai தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இப்படகு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்தின் போது படகில் 32 இந்தியச் சுற்றுலாப் பயணிகளும், 4 ஊழியர்களும் இருந்துள்ளனர். படகு திடீரென தலைகீழாகக் கவிழ்ந்ததால் பலர் படகிற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
விபத்தைக் கண்ட அருகில் இருந்த பிற படகுகளும், எல்லைப் பாதுகாப்புப் படையினர், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படகில் இருந்தவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








