Mar 17, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் உணவுச்சேவை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: 6.7% வரை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல்
உலகச் செய்திகள்

சிங்கப்பூர் உணவுச்சேவை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: 6.7% வரை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல்

Share:

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உணவு மற்றும் பானங்கள் துறையில் பணியாற்றும் சுமார் 53,000 உள்ளூர் ஊழியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது. இதற்கான முற்போக்கு ஊதிய மாதிரியின் புதிய பரிந்துரைகளை மனிதவள அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாக நேற்று மார்ச் 16, 2026, அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், ஜூலை 1, 2026 முதல் ஊழியர்களின் ஊதியம் ஆண்டுக்கு 6.7% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பரிந்துரைகளின்படி, நுழைவு நிலை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திர மொத்த ஊதியம் தற்போதுள்ள $2,080-லிருந்து ஜூலை மாதம் முதல் $2,220-ஆக உயர்த்தப்படும். இந்த ஊதிய உயர்வு படிப்படியாக அதிகரித்து, 2028-ஆம் ஆண்டுக்குள் $2,500-ஐ எட்டும். உணவுக்கூட உதவியாளர்கள், சமையல்காரர்கள் மற்றும் பரிமாறுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு ஊழியர்கள் இந்த மாற்றத்தால் பயனடைவார்கள். குறிப்பாக, கூடுதல் பொறுப்புகளைக் கொண்ட மேற்பார்வையாளர்களுக்கு ஆண்டுக்கு $145 வரை ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, அவர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் இடையிலான வருமான இடைவெளியைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று மனிதவள அமைச்சின் இணை அமைச்சர் தினேஷ் வாசு தாஷ் தெரிவித்துள்ளார். அதே சமயம், முதலாளிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களைக் குறைக்க 'முற்போக்கு ஊதியக் கடன் திட்டத்தின்' (PWCS) கீழ் அரசாங்கம் தனது நிதியுதவியை 30% வரை அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News