ஜகார்த்தா, ஜனவரி.18-
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் விபத்துக்குள்ளான ATR 42-500 வகை விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரது உடல், சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடர்ந்த காடாகவும், மிக அபாயகரமான சரிவுப் பகுதியாகவும் இருக்கும் இடத்தில் உடல் மீட்கப்பட்டிருப்பதால், அதனை மேலே கொண்டு வருவதற்கு மீட்புக் குழுவினர் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் என இந்தோநேசியாவின் 14-வது வட்டார இராணுவத் தளபதி Mejar Jeneral Bangun Nawoko தெரிவித்தார்.
பலத்த மழை, அடர்ந்த மூடுபனி போன்ற மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்ட உடல் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படவுள்ள வேளையில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் சில Bulusaraung மலைப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இந்த விமானம், இந்தோனேசிய கடல்சார் - மீன்வள அமைச்சுக்குச் சொந்தமான ரோந்து விமானம் என்பது நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்பட்டது.








