கனடாவில் ஏற்படும் காட்டுத்தீயால் வெளியேறும் புகை அமெரிக்காவின் காற்றுத் தரத்தைப் பாதிப்பதாகக் கூறி, கனடா மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். காட்டுத்தீயைத் தடுப்பதற்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கனடா மேற்கொள்ளவில்லை என்றும், இது அமெரிக்காவுக்கு பில்லியன் கணக்கிலான டாலர் இழப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடாவின் காடுகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், இது ஒவ்வொரு ஆண்டும் தொடர் கதையாகி வருவதாகவும் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இது குறித்துப் பேசப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள கனடாவின் அவசரகால மேலாண்மை அமைச்சர் எலினோர் ஒல்ஸ்ஸெவ்ஸ்கி, இரு நாடுகளும் காட்டுத்தீயை அணைக்க ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும், காடுகள் பாதுகாப்புக்காகக் கனடா பெரும் முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவின் பல நகரங்களில் காற்றுத் தரம் மோசமடைந்துள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியைப் பாதிக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.








