லாவோஸில் ஆறு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த விவகாரத்தில், மதுபானத்தில் மெத்தனால் கலந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதில் போதிய சான்றுகள் இல்லை என்று லாவோஸ் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வாங் வியங் நகரில் தங்கியிருந்த ஆஸ்திரேலியா, டென்மார்க், அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நச்சுத்தன்மையுள்ள மது அருந்தியதால் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் மதுபான ஆலை உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டாலும், அவருக்கு விதிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனை மற்றும் அபராதம் மிகவும் குறைவானதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், சம்பந்தப்பட்ட நாடுகளும் இந்தத் தண்டனை உயிரிழப்புகளின் தீவிரத்தை பிரதிபலிக்கவில்லை என்று கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் லாவோஸ் அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, லாவோஸ் நாட்டிற்கான பயண ஆலோசனையை ஆஸ்திரேலிய அரசு கடுமையாக்கியுள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.








