பாங்காக்/மஸ்கட்: மத்திய கிழக்கின் முக்கிய கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில், தாய்லாந்தின் 'மயூரி நாரீ' சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ஊழியர்கள் மாயமாகியுள்ளனர். அவர்கள் கப்பலின் எஞ்சின் அறைக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இந்தக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஓமன் கடற்படை, 20 ஊழியர்களை மீட்ட நிலையில், எஞ்சிய மூவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், எஞ்சின் அறைக்குள் மீட்புக் குழுவினர் நுழைய முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் அந்த மூன்று ஊழியர்களின் நிலை குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது.








