கட்டாக், மார்ச் 16 – ஒடிசா மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையின் 'டிராமா கேர்' பிரிவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பிரிவில் 23 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற நோயாளிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் முயற்சியின்போது மேலும் 3 பேர் மூச்சுத்திணறல் மற்றும் காயங்களால் உயிரிழந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட 11 மருத்துவமனை ஊழியர்களும் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். மேலும், இந்தத் துயரச் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தவும், பாதுகாப்பு விதிமுறைகளில் குறைபாடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.








