மலேசியா உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத தங்குமிடம் வழங்கும் கால அவகாசத்தை 60 நாட்களிலிருந்து 30 நாட்களாகக் குறைக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2024 ஜூலை முதல் இந்த 60 நாட்கள் விசா இல்லாத தங்கும் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
எனினும், இந்த நீண்ட கால அவகாசத்தைப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுவது, மோசடிச் செயல்களில் ஈடுபடுவது மற்றும் அங்கீகரிக்கப்படாத வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் பொருட்டே இந்த விசா இல்லாத தங்கும் காலம் பாதியாகக் குறைக்கப்படவுள்ளது. இது தொடர்பான திட்டத்தை வெளியுறவு அமைச்சகம் ஒப்புதலுக்காக அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கேவ் தெரிவித்தார். மேலும், நாட்டில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மற்ற விசா வகைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








