அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான அல்காட்ராஸ் தீவுக்கு அருகே, 20 பேருடன் சென்ற படகு ஒன்று தீப்பிடித்துக் கவிழ்ந்து மூழ்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் மாயமாகியுள்ளனர். தனியார் மோட்டார் படகு ஒன்று அல்காட்ராஸ் தீவிலிருந்து சுமார் 600 யார்டு தொலைவில் தீப்பிடித்து எரிவதாகப் பேரிடர் மீட்புக் குழுவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அந்தப் படகு நீரில் தலைகீழாகக் கவிழ்ந்திருந்தது.
நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவரை மீட்ட மீட்புக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கிய போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும், படகில் பயணம் செய்த மற்ற 16 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான எஞ்சிய மூவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்க கடலோர காவல்படை, உள்ளூர் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் இணைந்து ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் மீட்புப் படகுகளின் உதவியுடன் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அலைகளின் நகர்வைக் கணிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் அனல் இமேஜிங் கருவிகளைப் பயன்படுத்தி இரவு நேரத்திலும் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.








