வீட்டின் சமையலறைக்குள் புகுந்த கரடி ஒன்று, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து உணவுகளைத் தேடிப் பின் துரத்தியடித்த சம்பவம் ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்குப் பகுதியான இவாடேவில் உள்ள ஷிசுகுயிஷி நகரில் உள்ள ஒரு வீட்டில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் சமையலறைக்குள் நுழைந்த கரடி ஒன்று, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து அதில் இருந்த உணவுப் பொருட்களைக் கலைத்துப் போட்டுள்ளது. பின்னர், சமையலறைக்கு அருகில் உள்ள பின்வாசல் வழியாக வெளியேறிய அந்தக் கரடி, அங்குள்ள குப்பைத் தொட்டியிலும் உணவைத் தேடியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதே பகுதியில் கடந்த ஜூலை 5 முதல் இதுவரை நான்கு வீடுகளுக்குள் கரடிகள் புகுந்ததாகப் புகார்கள் பதிவாகியுள்ளன. ஜப்பானில் கடந்த ஏப்ரல் 1 முதல் இதுவரை கரடிகள் தாக்கியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். குளிர்கால உறக்கத்திலிருந்து வெளிவந்துள்ள கரடிகள், உணவுத் தட்டுப்பாடு மற்றும் காடுகளின் பரப்பளவு குறைதல் போன்ற காரணங்களால் நகர்ப்புறங்களுக்குள் நுழைவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.








