கொலம்பஸ், மார்ச் 16 – அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆழ்கடல் புதையல் வேட்டைக்காரரான டாமி தாம்சன், சுமார் 10 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு கடந்த மார்ச் 4-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். 1857-இல் கடலில் மூழ்கிய 'எஸ்எஸ் சென்ட்ரல் அமெரிக்கா' என்ற கப்பலில் இருந்த தங்கக் காசுகள் எங்குள்ளன என்பதை வெளிப்படுத்த மறுத்ததால், அவர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
73 வயதான டாமி தாம்சன், 1988-ஆம் ஆண்டு சவுத் கரோலினா கடலோரத்தில் 7,000 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்த இந்தக் கப்பலைக் கண்டுபிடித்தார். 'தங்கக் கப்பல்' என்று அழைக்கப்பட்ட இதில் இருந்த பல மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை அவர் மீட்டார். இருப்பினும், இந்தத் தேடுதல் வேட்டைக்கு 12.7 மில்லியன் டாலர் முதலீடு செய்த 161 முதலீட்டாளர்களுக்கு உரிய லாபத்தை அவர் வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, மீட்கப்பட்ட புதையலில் காணாமல் போன 500 தங்கக் காசுகள் எங்குள்ளன என்பதைத் தெரிவிக்க அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தலைமறைவாக இருந்த அவர், 2015-இல் பிடிபட்டார். புதையல் ரகசியத்தைச் சொல்லும் வரை அவருக்கு விடுதலை கிடையாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பத்தாண்டுகள் கழிந்தும் அவர் மௌனம் காக்கவே, அவரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது எந்தப் பலனையும் தராது எனக் கருதிய நீதிபதி, அவரது தண்டனைக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவர் விடுதலையான போதிலும், அந்த 500 தங்கக் காசுகளின் மர்மம் இன்னும் விலகவில்லை.








