கடந்த சனிக்கிழமை பினாங்கு ஸ்பைஸ் அரங்கம் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத இசை இரவாக 'தேனிசைத் தென்றல்' தேவாவின் நேரடி இசை நிகழ்ச்சி அமைந்தது.
கீ குளோபல் நெட்வொர்க் நிறுவனத்தின் நேர்த்தியான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைப்பிரியர்கள் திரண்டு வந்து கானா பாடல்களின் தாளத்திற்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடினர்.
'பாட்ஷா', 'அண்ணாமலை' எனத் தேவா இசையமைத்த காலத்தால் அழியாத பாடல்களை அவரே மேடையில் பாடியபோது, ஒட்டுமொத்த அரங்கமும் மின்சார வேகம் பாய்ந்தது போன்ற பிரமிப்பில் ஆழ்ந்தது. ஒலி, ஒளி மற்றும் சர்வதேச தரத்திலான மேடை அமைப்பு ரசிகர்களைச் சிலிர்க்க வைத்தது.
இந்த அபார வெற்றி குறித்து கீ குளோபல் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் குகிலன் பேசுகையில், "எதிர்பாராத ஆதரவை நல்கிய ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். முதல் நாளை விட, இரண்டாம் நாள் கலைவிழாவிற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, "இதேபோன்ற பிரம்மாண்ட கலைவிழாக்களை அடுத்ததாக கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் பாருவில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதேபோல், பினாங்கிலும் இன்னும் அதிகமான கலைநிகழ்ச்சிகள் தொடரும்," என டாக்டர் குகிலன் உறுதியளித்தார்.
தலைமுறைகள் கடந்தும் தனது இசையால் மக்களைக் கட்டிப்போடும் தேவாவின் இந்த நிகழ்ச்சி, தமிழ் திரையிசை உலகில் அவர் ஒரு 'மறக்க முடியாத சகாப்தம்' என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.








