சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் "ஜெயிலர் 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்று ஏப்ரல் 4, 2026 சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த முக்கிய அப்டேட்டைப் பகிர்ந்து கொண்டார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், "ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்," என்று கூறினார். இப்படம் ஜூன் 12, 2026 அன்று வெளியாகலாம் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் இந்தத் தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "வணக்கம்" என்று மட்டும் கூறி ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார். அரசியல் தொடர்பான கருத்துக்களைத் தவிர்ப்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
கடந்த மாதம் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கள் திமுக மிரட்டலால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற பேச்சு குறித்துப் பேசியிருந்த ரஜினிகாந்த், "காலம் பதில் சொல்லும்" என்று ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தனது முழு கவனத்தையும் சினிமாப் பணிகளிலேயே செலுத்தி வருகிறார்.
"ஜெயிலர் 2" திரைப்படத்தில் மோகன்லால், ஷாருக்கான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








