ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த எந்த தொகுதியிலும், முன்னாள் அமைச்சரான டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி போட்டியிடலாம், அது அவரது தனிப்பட்ட உரிமையும், சுதந்திரமும் என அம்மாநில பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவர் ஜிம்மி புவா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிகேஆர் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்த ரபிசி ரம்லி, பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியுடன் இணைந்து அதனை வழிநடத்தப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், அவர் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடப் போவதாகத் சில தரப்பினர் கூறி வருவது குறித்து ஜிம்மி புவாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ள ஜிம்மி புவா, எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் விரும்பும் எந்தத் தொகுதியிலும் போட்டியிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ரபிசியின் கட்சியோ அல்லது மூடா மற்றும் வாரிசானோ, பிற கட்சிகள் எதுவாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு நமது கட்சி இயந்திரம் வலுவாக இருக்க வேண்டும் என்பதையே நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








