பேராக் மாநிலம், தஞ்சோங் ரம்புத்தான் பகுதியில், கடந்த வாரம் 18 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஐந்து ஆடவர்கள் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
22 வயதான எஸ்.கே. ஸ்ரீ சக்தி வேல், 33 வயதான கே. திருச்செல்வன், 36 வயதான ஷஷிபால் சிங் மன்மோகன் சிங், 24 வயதான என். தனேஷ்வரன் மற்றும் 35 வயதான பி. உகேந்திரன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், நீதிபதி நொரிசான் ரிடுவான் முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் அதனை புரிந்துகொண்டதாக தலைஅசைத்தனர்.
இவர்கள் மீது பொதுவான நோக்கத்துடன் கூட்டாகக் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கருதி, குற்றவியல் சட்டம் பிரிவு 34 உடன், கொலை குற்றத்திற்கான பிரிவு 302-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐந்து பேரும், தற்போது தலைமறைவாக உள்ள மற்றொரு நபருடன் சேர்ந்து, கடந்த மே 12-ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை,ஜாலான் பெர்பாடுவான் சவுத்வேர்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் அருகே, 18 வயதான எஸ்.கே. கிருஷ்ணன் என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படி தண்டனைகள் விதிக்கப்படலாம்.










