ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மந்திரி பெசார் பதவிக்கான எந்தவொரு "அட்டைப் பட" வேட்பாளரையும் அறிவிக்கவில்லை என்று அக்கூட்டணியின் புத்திரி வங்சா வேட்பாளர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் சுல்தானின் ஆட்சி அதிகாரத்துக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே மந்திரி பெசார் பதவிக்கான வேட்பாளரை அறிவிப்பது அவசியமில்லை என்றும், அந்த நியமன அதிகாரம் இறுதியில் ஜோகூர் சுல்தானின் அதிகார வரம்பில் இருப்பதை பக்காத்தான் ஹராப்பான் முழுமையாக மதிப்பதாகவும் மஸ்லீ மாலிக் விளக்கமளித்துள்ளார்.
நேற்று இஸ்கந்தர் புத்திரியில் நடைபெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மஸ்லீ மாலிக், மாநில மந்திரி பெசார் பதவிக்கென ஒரே ஒருவரை முன்னிறுத்துவதற்குப் பதிலாக, மாநிலத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்யத் தயாராக உள்ள திறமையான வேட்பாளர்கள் குழுவையே கூட்டணி மக்களிடம் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.








