ஷா ஆலமில் உள்ள பிகேஎன்எஸ் வளாகம், கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு தேவையான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முதல் மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளதாக சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகமான பிகேஎன்எஸ் தெரிவித்துள்ளது.
பார்வையாளர்கள், வாடகைதாரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகளின்படி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிகேஎன்எஸ் குறிப்பிட்டுள்ளது.
இக்கட்டிடத்தில் சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை அலுவலகங்கள் அமைந்துள்ளதால், பொதுமக்கள் அதிகம் பார்வையிடும் இடமாகும்.
இந்நிலையில், இவ்விபத்தில் யாருக்கும் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








