சுங்கை பட்டாணி, குவாலா மூடா பகுதியிலுள்ள பேரங்காடியில், நேற்று நடைபெற்ற கண்காட்சி ஒன்றில், ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடித்து வியாபாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 20 மற்றும் 40 வயதுடைய இரு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அந்த ஹீலியம் எரிவாயு சிலிண்டரின் உரிமையாளரைக் கண்டறியவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அப்பகுதியில் தற்காலிகமாக வணிக நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஹன்யான் ரம்லான் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடந்த இந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் போது, சுமார் 100 மீட்டர் வரையில் அதன் சிதறல்கள் பரவி அங்கிருந்த பலரைத் தாக்கியதாக நம்பப்படுகின்றது.
இதில் பலத்த காயமடைந்த 42 வயதான வர்த்தகர் அஸ்மி அகமட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தானாக முன்வந்து போலீஸ் புகார் அளிக்குமாறு ஹன்யான் ரம்லான் வலியுறுத்தியுள்ளார்.








