ஜோகூர் மாநிலம் பொந்தியான் மாவட்டத்தின் பெக்கான் நானாஸ் பகுதியில் உள்ள உணவு மற்றும் பான விற்பனை நிலையம் ஒன்றின் முன்பு நேற்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் ஆடவர் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை சுமார் 3.53 மணியளவில் போலீசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்ரத் ஹுசைன் மியோன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
22 வயதுடைய அந்த இளைஞரின் கைகள் மற்றும் கால்களில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹஸ்ரத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.








