சர்வதேச கடற்பரப்பில் மனிதநேயப் பணியில் ஈடுபட்டிருந்த போது இஸ்ரேலியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 29 மலேசியர்கள் உட்பட குளோபல் சுமூத் புளோட்டிலா (GSF) 2.0 கப்பலைச் சேர்ந்த அனைவரும் நேற்று அந்நாட்டு நேரப்படி, மாலை 5.45 மணியளவில் துருக்கியின் இஸ்தான்புல் நகரை பாதுகாப்பாக வந்தடைந்தனர்.
மொத்தம் 428 செயற்பாட்டாளர்களும், அதில் அடங்கிய 29 மலேசியர்களும் விடுவிக்கப்பட்டதாக நேற்று இரவு அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் , அவர்களில் ஐந்து ஆண்கள் உட்பட ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடமிருந்து கிடைத்த தகவலின்படி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மூன்று டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானங்களை ரமோன் விமான நிலையத்திற்கு அனுப்பியதாக சுமூத் நுசாந்தாரா கட்டளை மையத்தின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சானி அரபி அப்துல் ஆலிம் அரபி தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்ததாக தகவல்கள் வெளியானதால், அக்குழுவிலுள்ள மலேசியர்கள், துருக்கியில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், நாளை மலேசியா புறப்படவுள்ள 29 மலேசியர்களும், ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.








