வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் புக்கிட் நானிங் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் தம்மை தொகுதி மக்கள் வெற்றிப் பெறச் செய்வார்களேளானால் தொகுதியில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு முழு வீச்சில் பாடுபடப் போவதாக அதன் வேட்பாளர் முகமது யசாருடின் குஸ்னி உறுதி அளித்துள்ளார்.
கடந்த 11 நாட்களாக தாம் மேற்கொண்டு வரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினரை சந்தித்து விட்டதாகவும், அவரவர் தங்கள் பகுதியில் எதிர் நோக்கி வரும் பிரச்னைகளை முன்வைத்து இருப்பதாக முகமது யசாருடின் தெரிவித்தார்.
புக்கிட் பக்ரி போன்ற பகுதிகளில் சீன, மலாய்க்காரர் மற்றும் இந்திய வாக்காளர்களை சந்தித்ததாகவும், இதுவரையில் நல்லதொரு ஆதரவு இருந்தாலும், வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்தலின் போது அதிகமானோர் வாக்களிக்க வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புக்கிட் நானிங் சட்டமன்றத்தொகுதியில் எண். 2 இல் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் முகமது யசாருடின், ஐந்து முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். தொகுதி மக்களை சந்தித்தப் போது, அவர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்ததாக முகமது யசாருடின் திசைகளிடம் தெரிவித்தார்.








