"எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகளை அப்படியே நம்பிவிடாதீர்கள்; எந்தவொரு தகவலையும் தீர விசாரித்து, உண்மையை ஆராய்ந்து, சிந்தித்து வாக்களிப்பதே ஒரு பொறுப்பான குடிமகனின் அடையாளம்" என்று ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
ஜோகூர் மாநிலத் தேர்தல் களத்தில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கார்த்தியாயினி, வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது தொகுதி மக்களிடையே பேசிய கார்த்தியாயினி, தேர்தல் நேரங்களில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் உண்மைக்கு மாறான அரசியல் பரப்புரைகள் குறித்தும், வதந்திகள் குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"ஜனநாயகத்தில் வாக்கு என்பது மிக வலிமையான ஆயுதம். தேர்தல் நேரத்தில் யார், என்ன சொன்னாலும் அதை அப்படியே கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது. ஒரு தகவலைக் கேட்கும்போது அதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன, அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களின் ஒரு வாக்கு, இந்தத் தொகுதியின் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. எனவே, வதந்திகளுக்குப் பலியாகாமல், பொறுப்புள்ள குடிமக்களாக உண்மைகளையும் சாதனைகளையும் ஆராய்ந்து, தகுதியான வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள் என்று ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக போட்டியிடும் கார்த்தியாயினி, தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தின் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முக்கியப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டு கார்த்தியாயினி ஜெயபாலனுக்கு தங்களின் பலத்த ஆதரவை வெளிப்படுத்தினர்.








