கோலா லங்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று காலை கத்திக்குத்துக்கு ஆளான 15 வயது மாணவி, தற்போது பந்திங் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சிலாங்கூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 10.13 மணியளவில் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த மாணவிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் அவரது இடது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தந்தை முகமது ஃபிருஸ் இப்ராகிம் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய நபர் தனது மகளின் முன்னாள் வகுப்புத் தோழன் என்றும், ஒழுங்கு நடவடிக்கைக்காக பள்ளிக்கு வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கருப்பு நிற டி-சட்டை மற்றும் சிவப்பு நிற காற்சட்டையை அணிந்து கத்தியுடன் பள்ளிக்குள் நுழைந்த சந்தேக நபரை போலீஸ் துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்து, கத்தியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.








