மலேசிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முற்றிலும் மறுத்துள்ளார்.
அவை உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படும் தகவல்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோனாஸ், ஹார்முஸ் வழியாக செல்லாது என்று சில தரப்பினர் மாநில அரசுக் கூட்டங்களில் கூறுவது உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசியலில் சில நேரங்களில் உண்மையும் தரவுகளும் புறக்கணிக்கப்படுவதாகவும் அன்வார் விமர்சித்துள்ளார்.
மேலும், ஹார்முஸ் நீரிணை உலக எரிசக்தி வர்த்தகத்திற்கு மிக முக்கியமான கடல் வழித்தடமாகத் திகழ்கிறது என்றும், மலேசியாவும் அதையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.
தற்போது அந்தப் பகுதியில் நெரிசல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் அதிகரித்துள்ளதால் சரக்கு கட்டணம் மற்றும் காப்பீட்டு செலவுகள் உயர்ந்து, எண்ணெய் விலைகளும் அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








