நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை மொத்தம் 42,807 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதும், நிறுவனங்களின் அளவைச் சுருக்கியதுமே இந்த வேலை இழப்புகளுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இதனால் 17,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமூக பாதுகாப்பு அமைப்பின் பெர்கேசோ புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போதைய வேலை இழப்புகளுக்கு முக்கியக் காரணம் என்ற கருத்து தவறானது என்று தெரிவித்த அவர், தொழிலாளர்கள் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கடந்த ஜனவரி முதல் மைஃபியூச்சர்ஜாப்ஸ் போர்ட்டல் மூலம் 605,168 வேலை வாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் வேலை வாய்ப்பு சந்தையில் தொழிலாளர்களுக்கான தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.








