கடந்த ஆண்டு நெகிரி செம்பிலான், செனவாங்கில் நிகழ்ந்த விபத்தில் மூன்று பேரின் மரணத்திற்குக் காரணமான 18 வயது இளைஞனை, மலாக்காவில் உள்ள ஹென்றி கர்னி சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப சிரம்பான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் நூருல் அசுயின் தல்ஹா முன்னிலையில், நிறுத்தப்பட்ட அந்த இளைஞன், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப்பள்ளியில் இருக்க வேண்டும் என்று ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.
உரிமம் இன்றி ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் ஐடில் ரம்தான், அஸ்வாரி லோத்பி, ஐசார் அசிம் ஆகிய மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும் அந்த இளைஞனின் பெற்றோர் தலா 2 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.








