போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையை 500 ரிங்கிட்டாக உயர்த்தும் நடவடிக்கை 2029-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் ஓட்டுநர் நடத்தையை மாற்றிக்கொள்ளவும் இந்த நீண்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அந்தோணி லோக், அபராதம் விதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அதனைச் செலுத்துவோருக்கு 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த அபராதத் தொகை உயர்வு அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக அல்ல, மாறாகப் போக்குவரத்து விதிகளை மக்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கே ஆகும் என்று நாடாளுமன்றத்தில் இன்று சாலைப் போக்குவரத்துச் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் அவர் விளக்கமளித்தார்.
சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்வது போன்ற கடுமையான விதிமீறல்களுக்கு மட்டுமே இந்த 500 ரிங்கிட் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும், அத்துடன் தொடர் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த கெஜாரா புள்ளிக் குறைப்பு முறையும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, வாழ்க்கைச் செலவின உயர்வைக் காரணம் காட்டி, இந்த அபராத உயர்வுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.








