பொதுப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை முறை குறித்து கருத்து தெரிவித்ததற்காக, கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான ஹைம் ஹில்மான் அப்துல்லா மீது நாளை சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
நாளை காலை 9 மணிக்குத் தாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருப்பதாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜித்ரா சட்டமன்ற உறுப்பினரான அவர், இனம் பாராமல் அனைத்து மலேசியக் குழந்தைகளுக்கும் நியாயமான கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யத் தாம் தொடர்ந்து குரல் கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பி40 மற்றும் எம்40 குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்தே தாம் கேள்வி எழுப்பியதாக அவர் கூறினார்.
முன்னதாக, ஜூன் 13 அன்று ஹைம் ஹில்மான் ஆற்றிய உரையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வித் துறையின் மீதும், தகுதியின் அடிப்படையில் தேர்வான பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகக் கூறி, உயர்கல்வி அமைச்சு ஜூன் 15-ல் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.








