பண்டார் சன்வேயில் வெளிநாட்டு மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், நிதிப் பிரச்சினை மற்றும் உறவு விவகாரம் இருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியும் கைது செய்யப்பட்ட அந்த சந்தேகநபரும் 20 வயதுடையவர்கள் என்றும், இருவரும் காதலித்து வந்ததோடு ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார். சடலம் கண்டெடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வைத்து மற்றொரு வெளிநாட்டு மாணவரான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் இவர் மட்டுமே என்றும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதம் உள்ளிட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் உடலில் பல காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரங்கள் தெரியவரும் எனத் டத்தோ ஷாசெலி தெரிவித்துள்ளார். மேலும் இக்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








