சுங்கை பாலாங் சுங்கை பாலாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக முதல் முறையாகக் களமிறங்கும் 31 வயது இளம் வேட்பாளர் சொராயா பதருடின் தனது வெளிப்படையான அணுகுமுறையாலும், சீர்திருத்த எண்ணங்களாலும் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொறியியல் பயின்ற சொராயா , அரசியல் பின்புலம் இல்லாத ஒரு தொழில்முறைப் பின்னணியில் இருந்து பொதுச் சேவைக்கு வந்துள்ளார். கடல்சார் மற்றும் எண்ணெய், எரிவாயு துறைகளில் பணியாற்றிய அனுபவமே இவரை அரசியலுக்கு உந்தியுள்ளது.
தேசியக் கொள்கைகள் சாதாரண மீனவர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கின்றன என்பதைத் தான் நேரில் கண்டதாகச் சொரயா குறிப்பிட்டார். நீதியும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் கொண்ட மலேசியாவை உருவாக்க பிகேஆர் கட்சி மட்டுமே சிறந்த தளம் என்பதால், அதில் இணைந்து செயல்படுவதாக அவர் தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நீண்ட கால சீர்திருத்தப் போராட்டமும், உறுதியும் தனக்கு மிகப்பெரிய தூண்டுதல் என்றும் அவர் கூறினார்.
பாரிட் ஜாவா மற்றும் பந்தாய் லேகா ஆகிய பகுதிகள் பெரும் பொருளாதாரத் திறனைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அப்பகுதிகளில் உள்ள படகுத்துறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப் போவதாக உறுதியளித்தார். இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெற்று, இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார்.








