கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை பேரா, கெரிக்கிலிருந்து கிளந்தான் ஜெலிக்குச் செல்லும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை முழுவதிலும் உள்ள 224 சாலைக் குழிகள் மூடப்பட்டுள்ளன.
பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட எந்தவொரு சாலைச் சேதத்தையும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பராமரிப்புக் குத்தகை நிறுவனத்தால், 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
அதனைத் தவிர்த்து, எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தால், உடனடி நடவடிக்கையாக, அவசர காலப் பணிகளை மேற்கொள்வதற்கு அக்குத்தகைகள் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று அலெக்சண்டர் நந்தா லிங்கி குறிப்பிட்டார்.
அதிகமான மரண விபத்துகளைச் சந்தித்திருக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்புச் சிக்கல்களுக்கு விரிவான தீர்வுகள் குறித்து செனட்டர் டத்தோ ஷம்சுடின் அப்துல் கஃபார் மேலவையில் எழுப்பிய கேள்விக்கு அலெக்சண்டர் நந்தா லிங்கி இவ்வாறு பதிலளித்தார்.








