ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலமான ஜேஎஸ்-எஸ்இஇசட் திட்டத்தை, ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரப் பொருளாகப் பயன்படுத்த வேண்டாம் என்று ஜொகூர் இடைக்கால மந்திரி புசார் டத்தோ ஓன் ஹாபிஸ் காஸி க்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அன்வார், இத்திட்டம் மத்திய அரசால் மாநில அரசின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்படும் ஒரு கூட்டாட்சி முயற்சி என்று தெளிவுபடுத்தினார். மலேசியா மற்றும் சிங்கப்பூர் பிரதமர்களுக்கு இடையே கையெழுத்தாகும் இந்த உடன்படிக்கை, இன்னும் மந்திரி புசார் நிலைக்கு எட்டவில்லை என்றும், மத்திய அரசின் பெரும் நிதியுதவியுடன் நடைபெறும் இத்திட்டத்திற்கு நன்றி கூறாமல், ஓன் ஹாபிஸ் விமர்சனம் செய்வது முறையற்றது மற்றும் முட்டாள்தனமானது என்றும் சாடினார்.
முன்னதாக, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பிரதான திட்ட வரைப்பட வெளியீட்டை மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக ஓன் ஹாபிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார். காலக்கெடு தள்ளிப்போவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பொருளாதார வேகத்தையும் பாதிக்கும் என்பதால், இனியும் தாமதிக்காமல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார். அதற்குப் பதிலடியாகவே பிரதமரின் இந்த செய்தி வெளியாகியுள்ளது.








