தெரெங்கானு கடல் பகுதியில் 12 பேருடன் சென்ற கணவாய் பிடிக்கும் படகு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீரென நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. படகின் என்ஜின் பகுதிக்குள் அதிகளவில் தண்ணீர் புகுந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 37 வயதுடைய அகமட் நசருதீன் முகமட் ஜலில் என்ற படகு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படகில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர்க்காப்பு ஜாக்கெட் அணிந்திருந்த போதிலும், படகு முழுமையாக மூழ்கியதால் சுமார் ஒரு மணி நேரம் கடலில் தத்தளிப்பிற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.
படகோட்டியான மற்றொருவர் உதவி தேடி கடலில் சுமார் 1.8 கிலோமீட்டர் தூரம் நீந்திச் சென்று வேறொரு படகின் உதவியை நாடியுள்ளார்.
இருப்பினும், அதற்குள் அகமட் நசருதீன் என்ற அந்த ஊழியர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் எஞ்சிய 11 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் அவர்களில் மூவர் சிகிச்சைக்காக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.








